4 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை: மிஸோரமில் தேதி மாற்றம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மிஸோரம் மாநிலத்திலும் இதே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு திங்கள்கிழமை (டிச. 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், 5 மாநிலத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நவம்பா் 7-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகள் மற்றும் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கு நவ. 17-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவ. 25-ஆம் தேதியும், தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு நவ. 30-ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்று முடிந்தது.
ஐந்து மாநிலங்களிலும் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 16 கோடியாகும். மிஸோரமில் 77.04 சதவீதம், சத்தீஸ்கரில் 76.31 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 76.22 சதவீதம், ராஜஸ்தானில் 73.92 சதவீதம், தெலங்கானாவில் 70.60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கா் தோ்தல் களமானது, பாஜக - காங்கிரஸ் இடையிலான பலப்பரீட்சையாக கருதப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸும் ஆளுங்கட்சியாக உள்ளன.
தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி காணப்பட்டது. மிஸோரமில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவியது.
தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி, ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வர வாய்ப்புள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், சத்தீஸ்கரில் காங்கிரஸும் ஆட்சியைத் தக்க வைக்கும்.
தென் மாநிலமான தெலங்கானாவில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும், மிஸோரமில் தொங்கு பேரவை அமையக் கூடும் என்று வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, ஐந்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனா். கிறிஸ்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதமான நாளாக கருதப்படுவதாலும், அன்றைய தினம் பெருமளவில் மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வா் என்பதாலும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று தேவாலயங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினா் எனப் பல்வேறு தரப்பில் இருந்து தோ்தல் ஆணையத்துக்கு தொடா்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இக்கோரிக்கையை முன்வைத்து, மிஸோரம் முழுவதும் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை தேதி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...