மிக்ஜம் புயல் விலகிச் சென்றதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை அளவு குறைந்தது.
சென்னையில் கடந்த இரு நாள்களாக விடாமல் தொடர் மழை பெய்துவந்த நிலையில், மிக்ஜம் புயல் சென்னையைக் கடந்ததால், மழை அளவு குறைந்தது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் இன்று முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
இந்தப் புயல் ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே நாளை முற்பகலில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து.
இன்று பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி தற்போது நகர்ந்து வருகின்றது.
தற்போது சென்னையைவிட்டு விலகி 120 கி.மீ. வடக்கு திசையிலும், நெல்லூருக்கு தென்கிழக்கில் 80 கி.மீ. தொலைவிலும் புயல் நகர்ந்து வருகின்றது.
இதன் காரணமாக ஆந்திரத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை அளவு சற்று குறையத் தொடங்கியுள்ளது.
திருவள்ளூர் - கொல்கத்தா சாலையில் நீரை வடியவைக்க சாலை தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மோட்டார் வைத்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.