திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த வெள்ளிக்கிழமை(டிச.1) கைது செய்யப்பட்டார். மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர், விசாரணைக்கு பின் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை டிச.15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெ.மோகனா உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட அங்கித் திவாரி, சிறைத் துறை அதிகாரிகளின் பரிந்துரைப்படி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஜாமீன் கோரி மனுத் தாக்கல்:
இந்த நிலையில் அங்கித் திவாரி தரப்பில் ஜாமீன் வழங்க கோரி, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஜாமீன் மனு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் தரப்பில், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் வாதங்களை ஏற்று, அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா தள்ளுபடி செய்தார்.