கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசின் அலட்சியம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். புயல், மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிப்புக்குள்ளாகி 5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.
ஒரு சொட்டு நீர் தேங்காது என்றார்கள், ஆனால் சென்னையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கிய நீரை அப்புறப்படுத்தத் தேவையான ராட்சத மோட்டார்களை தயார்நிலையில் வைத்திருக்கவில்லை. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை திமுக அரசு அலட்சியப்படுத்தியதால்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்னை வேளச்சேரியில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் சிக்கியவர்களை 5 நாட்கள் கழித்து மீட்பதா. ராட்சத பள்ளத்தில் சிக்கியர்வகன் உடனுக்குடன் மீட்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.