காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி மூலவருக்கான பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உடையது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில். இந்த கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முதலாவது பாலாலய கும்பாபிஷேகம் கடந்த 11.2.2022 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மூலவர் கச்சபேசுவரருக்கான 2-ஆவது பாலாலாய கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 12 -ஆம் தேதி கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை ஆகியன நடைபெற்றன. 13 -ஆம் தேதி புதன்கிழமை அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாக காட்சியளிக்கும் கச்சபேசுவரருக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிக்க | கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை சுயம்பு மூர்த்தியாக இருந்து வரும் கச்சபேசுவர சிவபெருமானுக்க பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் பூஜகர்கள் சுப்பிரமணிய சிவாச்சாரியார்,பிரபாகர் சிவாச்சாரியார் ஆகியோர் கச்சபேசுவரருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயத்தில் பந்தல்கால் நடும் விழாவும் நடைபெற்றது.
பாலாலய கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்க தலைவர் எம்.சிவகுரு,செயலாளர் கே.சுப்பராயன், திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள், ஆசிரியர் ஜீவரெத்தினம், அறநிலையத்துறை ஆய்வாளர் பிரீத்திகா, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்வேலன், ஓதுவார் த.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.