புதிய வகை தொற்று குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
"புதிய வகை தொற்று 3 அல்லது 4 நாள்களில் சரியாகிவிடும் என்பதால் பதற்றமடையத் தேவையில்லை. புதிய வகை தொற்று கேரளத்தில் 230 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று 264 பேருக்கு பரிசோதிக்கப்பட்டது. அதில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மூன்று அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் உள்ளது. இரண்டரை ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள், கடந்த ஓராண்டாகத்தான் கரோனாவின் அச்சத்திலிருந்து மீண்டெழுந்துள்ளனா்.
இத்தகைய சூழலில் அண்டை மாநிலமான கேரளத்தில் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: மக்களவைக்குள் புகைக் குப்பி வீச்சு: மேலும் 2 போ் கைது
கரோனா வைரஸ் புதிய உருமாற்றத்தை அடைந்ததே அதற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவா்கள் கருதுகின்றனா்.