தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் ஆட்சியர்களுடன், தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆணையர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரவருணி ஆற்றில் ஒருலட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலை குறித்தும், மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோவையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்ட பிறகு, தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருவதை அறிந்து காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.