4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்துகிறார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள மீட்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (டிச.19) அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்துசெய்து வெள்ள பாதிப்பு குறித்து பிஎஸ்என்எல், ரயில்வே, அஞ்சல் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
முன்னதாக, அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்கவும். மத்திய, மாநில அரசுத் துறைகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய வேண்டுகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 2 நாள்காக கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியின் செயல் நாடாளுமன்றத்திற்கே அவமானம்: கபில் சிபல்
வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.