நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு பமபதவாசல் திறப்பு சனிக்கிழை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் கி.பி.1761 இல் இந்த கோயில் கட்டப்பட்டது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதரால் பாடல் பெற்றது. புத்திரபாக்கியம் இல்லாவர்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா,லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை மனமுருகி வேண்டினால் அந்த பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம். வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் வைகுந்க ஏகாதசி விழாவை முன்னிட்டு திருஅத்யயன பகல்பத்து உற்சவம் கடந்த 13 -ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. சனிக்கிழமை (டிச.23) இந்த கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்றது.
இதையும் படிக்க | நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண,அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் அதிகாலை நடந்த பரமபதவாசல் திறப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதா,லெட்சுமணர் சமேத சந்தானராமர்.
வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை சொல்லியும், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம் செய்தும், நடந்த பரமபதவாசல் திறப்பில் அதிகாலை சீதா, லெட்சுமணர் சமேதராக சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அர்ச்சனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை அர்ச்சகர் நாராயணன் வழங்கினார்.
இரவு ராபத்து உற்சவம் தொடங்கியது. வரும் திங்கள்கிழமை (ஜனவரி 1) ஆம் தேதி ராமர் பட்டாபிஷேகத்துடன் திருஅத்யயன விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரமேஷ், ஆய்வாளர் ராசி, செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கைங்கர்யசாபாவினர்,திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அபயவரதராஜப் பெருமாள்
இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்றது. பரமபதவாசல் திறப்பில் ஶ்ரீதேவி, பூமாதேவி சமேத அபயவரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.