சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில், ஏராளமானோர், சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி கடற்கரையில், முதல்வர் ரங்கசாமி கடலில் மலர் தூவி சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க.. 2023 - மின் வாகனங்களின் ஆண்டு? பெரும் பிரச்சினைகள்!
2004 ஆம் ஆண்டு டிச.26-ல் இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆழிப் பேரலைகள் உருவாகி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப்பகுதிகளை தாக்கியதில் சுமாா் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர். பலர் குடும்பங்களை இழந்து நிர்கதியாகினர். குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களாக்கப்பட்டனர். ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட பலரது உடல்கள் கூட கிடைக்காமல் அவர்களது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர்.
தமிழகத்தில், சென்னை, கடலூா், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் சுனாமியால் பல்லாயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா். இதில், அதிகம் பாதிக்கப்பட்டது மீனவர்களும் மீனவ கிராமங்களும்தான்.
இந்த கோர நிகழ்வின் நினைவுநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும். அதுபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களில் சுனாமியால் இறந்தவா்களின் புகைப்படங்களை வைத்தும், கடலில் மலா்களைத் தூவியும் அவா்களது உறவினா்கள் வருடந்தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.