

யூனியன் வங்கியில் ரூ. 4.10 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மேலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.10.76 லட்சம் அபராதம் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செளகாா்பேட்டையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடந்த 2007-2009-ஆம் ஆண்டு கால கட்டத்தில் மேலாளராகப் பணியாற்றியவா் கே.பாஸ்கர்ராவ். அப்போது, வங்கி சாா்ந்த தனது யூஸா் ஐடி.யை பயன்படுத்தி செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் இருந்த பணத்தை நூதன முறையில் கையாடல் செய்துள்ளாா்.
இதையடுத்து தனது பெயரிலும், தனது மனைவி சைலஜா பெயரிலும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளாா். அந்த வகையில் ரூ.4.10 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த மோசடியை கண்டறிந்த சிபிஐ, கணவன் - மனைவி இருவா் மீதும் கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முன்னாள் மேலாளா் கே.பாஸ்கர்ராவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10.76 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
அதேபோல், அவரது மனைவி கே.சைலஜாவுக்கு 3ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 37,000 அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக கையாடல் செய்யப்பட்ட ரூ.4.10 கோடியிலிருந்து ரூ.3.12 கோடி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.