
திருமயம்: புதுக்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் சென்னை, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நேரிட்ட சாலை விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் ஐயப்பன் கோயிலுக்கு வேனில் சென்ற ஐயப்ப பக்தர்களில் ஒரு பெண் உள்பட 5 சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த 4 பேர் உள்பட 18 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு வேனில் ஐயப்ப பக்தர்கள் 4 ஆண்கள் உள்பட 13 பெண்கள் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டனர். இதேபோல சென்னை அமைந்தக்கரை பகுதியிலிருந்து ஒரு வேனில் 15 ஆண்கள் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டனர்.
திருமயம் அருகேயுள்ள நமணசமுத்திரம் காவல் நிலையம் எதிரே இருந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த வாகனங்களை நிறுத்திவிட்டு தேனீர் அருந்த சிலர் இறங்கினர். கண்ணயர்ந்த பலர் வேனிலேயே இருந்தனர். இதைப்போல திருக்கடையூரில் இருந்த ராமநாதபுரம் சென்ற ஒரு காரும் அங்கு நின்றிருந்தது. .
அப்பொழுது நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்திக்குச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக கடை முன்னே நின்ற வேன் மீது மோதியது.
இதையடுத்து அந்த வேன் முன்னால் நின்றிருந்த மற்றொரு வேனையும் மோதித்தள்ளியது. அடுத்ததாக, இந்த வேன் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தை இடித்துத்தள்ளியது.
சிமெண்ட் லாரி மோதிய வேகம் காரணமாக அடுத்தடுத்து நின்ற ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மற்றும் கார் உள்பட 3 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில், வேன்களில் இருந்த திருவள்ளூர் மாவட்டம், திருவெள்ளவயல் ரா. கோகுலகிருஷ்ணன்(28), பனையஞ்சேரி ஜெகநாதன்(60), பனையஞ்சேரி சீனிவாசன் மனைவி சாந்தி(49), சென்னை அமைந்தக்கரை ச. சதீஷ்(25), மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்த ஜெ.சுரேஷ்(39) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயங்களுடன் 4 பேரும் லேசான காயங்களுடன் 14 பேரும் திருமயம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு
இந்த விபத்து நேரிட்ட இடத்தை கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டார். விபத்து குறித்து காவல்துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த சிமெண்ட் லாரி ஓட்டுனர் மணிகண்டன்(39) மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.