நீடாமங்கலம் பகுதியில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக்குழுவினர் ஆய்வு!
நீடாமங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
பருவம் தவறி பெய்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து போனது.அறுவடை செய்யப்பட்ட நெல்லும் மழையில் நனைந்து போனது இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் ஈரப்பதம் அதிகரித்தது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசின் நேரடி நெல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக இருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.
இந்த நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதனையடுத்து மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், யோகேஷ் அடங்கிய குழுவினர், மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ, ஆகியோர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்த குழுவினர் நெல் மற்றும் பயிர் சேதங்களை ஆய்வு செய்து அதன் மாதிரிகளை தமிழக உணவு கழக பரிசோதனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கையை அளிக்க உள்ளனர்.தொடர்ந்து மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை தொடர்ந்து அரிச்சபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.