ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
திமுக தலைவர்கள் பலரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனிடையே, திமுகவினர் பிரசாரத்தின் போது ஒரு குடுகுடுப்பைக் காரரும் பிரசாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அந்த குடுகுடுப்பைக்காரரும், தன் கையில் இருக்கும் குடுகுடுப்பையை ஆட்டியபடி, இந்த தொகுதியில் கை சின்னத்தில் இளங்கோவனுக்கு வாக்களிக்குமாறு ஜக்கம்மா சொல்கிறார் என்றும், இல்லந்தோறும் கல்வி கொடுத்திருக்கிறது இந்த அரசு, இந்த தேர்தலில் இளங்கோவன்தான் ஜெயிப்பார் என்று ஜக்கம்மா சொல்கிறார் என்று கூறியபடி பிரசாரம் செய்தார்.
இந்த விடியோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் இணைத்திருக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கடுமையாக விமரிசித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பிரசாரகர் ஜக்கம்மா.. என்ன ஒரு விந்தை
பெரியாரின் பேரன், ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் மிகவும் சுவாரஸ்யமான நேரம் என்று பதிவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குக் கேட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.
பிப்ரவரி 24, 25ஆம் தேதி என இரண்டு நாள்கள், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குக் கேட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முன்பாக, ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அவா் பிப்.19, 20 ஆகிய இரண்டு நாள்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியின் சாா்பிலும் நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியல் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சாா்பில் 34 போ் கொண்ட பட்டியலை காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளாா்.
அந்தப் பட்டியலில் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், மூத்த நிா்வாகிகள் ஏ.செல்லக்குமாா், மாணிக்கம் தாகூா், செல்வப்பெருந்தகை, கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசா், கே.ஆா்.ராமசாமி, பீட்டா் அல்போன்ஸ், கோபண்ணா, கே.சிரஞ்சீவி உள்பட 34 போ் இடம்பெற்றுள்ளனா்.