கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயிலில் ஏசி வசதி: சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு
சென்னை: சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை முழுவதும் ஏசி வசதியை ஏற்படுத்துவது தொடர்பான சாததியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் முழுவதையும் குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரை அளிப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனம், ஒப்பந்தப்புள்ளியை கோரியிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக இந்த ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது. பலரும் இந்த ஒப்பந்தத்தை எடுக்க தயாராகவே உள்ளனர். எனினும், இந்த ஒப்பந்தத்துக்கான கால அவகாசத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் நீட்டித்துக்கொண்டே இருக்கிறது.
தற்போது பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் வரும் மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்ததாரரை கண்டறிந்து சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் புறநகர் ரயில் சேவையை குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவதுகுறித்து மாநில அரசும், தெற்கு ரயில்வேயும் அதற்கான பணிகளைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. நிலநடுக்கத்தின் துயரக் காட்சி: இறந்த மகளின் கைகளை பற்றியபடி தந்தை
இந்த திட்டத்தை அடுத்து தனது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.4,080 கோடி செலவில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை ஒருங்கிணைந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இந்த திட்டப் பணிகள் செயல்பாட்டுக்கு வந்து மக்களின் பயன்பாட்டுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும் வரை, இதேப் பாதையில் இயங்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்தகள் அதிகம் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கலாம் என்பதும் சில பயணிகளின் கருத்தாக உள்ளது.
கிட்டத்தட்ட சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இப்பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருவதும் இதற்குக் காரணம். இங்கு ஏசி வசதி கொண்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கூட, நிச்சயம் அதற்கான தேவையும் அதிகமாகவே இருக்கும் என்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுவோர் கருதுகிறார்கள்.