குடியரசு நாள் விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்சனிக்கிழமை (பிப்.11) தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் இவ்வாண்டு குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட படைப்பிரிவினர்களில் சிறப்பாக செயல்பட்ட ராணுவப்படைப் பிரிவு, மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப் பிரிவு, தேசிய மாணவர் படைப் பிரிவு (ஆண்கள்), சிற்பி பெண்கள் படைப் பிரிவு ஆகிய படைப்பிரிவிற்கும், குடியரசு நாள் விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.
குடியரசு நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள், தென்னக பண்பாட்டு மையம், செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகியவற்றின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு முதல் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் படைப்பிரிவினர்களுள் சிறப்பாக செயல்படும் படைப்பிரிவினர்களுக்கு பரிசுகள் வழங்கிட மாண்புமிகு முதல்வர் முடிவெடுக்கப்பட்டு, அதன்படி, இவ்வாண்டு குடியரசு நாள் விழாவில் சிறப்பாக செயல்பட்ட ராணுவப்படைப் பிரிவின் சார்பில் தலைவர் கேப்டன் யாஷ் தாதல், மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவின் சார்பில் உதவி கமாண்டன்ட் மனோஜ் கேஆர் பான்டே, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப் பிரிவின் சார்பில் ஆய்வாளர் வி. சுரேஷ்குமார், தேசிய மாணவர் படையின் (ஆண்கள்) சார்பில் தலைவர் என். திலிப் மற்றும் சிற்பி பெண்கள் படைப் பிரிவின் சார்பில் தலைவர் எஸ். மதினா, குடியரசு நாள் விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் மஞ்சு பாண்டே மற்றும் குரூப் கேப்டன் முகேஷ் பரத்வாஜ் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், துணைச் செயலாளர் (மரபு) மரு. எஸ். அனு ஆகியோர் உடனிருந்தனர்.