திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதற்காக பாலாலயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு அஷ்டபந்தன மஹா குடமுழுக்கு விழா நடைபெற்றது. தற்போது 13 ஆண்டுகளைக் கடந்துள்ளதால் குடமுழுக்கு விழாவிற்காக திருப்பணிகள் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இக்கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் குடமுழுக்கு விழா திருப்பணிகளும் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோயில் கிழக்கு கோபுரம் மற்றும் சால கோபுரம் (சண்முக விலாசம் வாசல்) ஆகியவற்றிற்கு பாலாலயம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகித் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று, அவை விமானதளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு குடமுழுக்கு விழாவிற்கான பந்தல்கால் நடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மரத்திலான கோபுரச்சிற்பங்களுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டு, மீண்டும் யாகசாலையில் வைத்து சிற்பங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, மகா மண்டபத்தில் வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர் கணேசன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீமதிசிவசங்கரன், திருக்கோயில் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை ஆணையர் வெங்கடேஷ், பேஷ்கார் ரமேஷ், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், வேல் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.