
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி கிராமத்தில் நியாய விலைக் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் மாற்றம் இருப்பதைக் கண்டு, அந்த அரிசியை அப்பகுதி விவசாயிகள் சோதித்து பார்த்துள்ளனர்.
அதில் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்திருப்பதும், முன்னறிவிப்பின்றி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து வட்ட வழங்க அலுவலரிடம் விவசாயிகள் கேட்டபோது ஜனவரி மாதம் முதலே வழங்கப்பட்டு வருவதாக கூறியதாகத் தெரிகிறது.
எவ்வித முன்னறிவிப்புமின்றி செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அரிசியுடன் நிம்மேலி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட அரிசியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். வட்டாட்சியர் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு, அரசின் கவனத்திற்கு விவசாயிகளின் கோரிக்கை குறித்து தெரிவிப்பதாகவும் அரிசியை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தார்.
இதையும் படிக்க: இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் ஜெயக்குமார் புகார்
இதனையடுத்து விவசாயிகள், அரிசியை திருப்பி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி எங்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமான அரிசி எங்களுக்கு வழங்கப்படும் வரை நியாய விலைக் கடையில் அரிசியை வாங்க மாட்டோம் என தெரிவித்து கலைந்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.