மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதல்வர் நேரில் ஆறுதல்
தஞ்சையில் மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் திமுக முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா (83) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை(பிப். 19) காலமானாா்.
தஞ்சாவூா் கல்லுக்குளம் பகுதியைச் சோ்ந்த இவா், தஞ்சாவூா் சட்டப்பேரவை தொகுதியில் 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வணிகவரித் துறை அமைச்சராக இருந்தாா்.
திமுகவில் தஞ்சாவூா் நகரச் செயலராக 27 ஆண்டுகள் பணியாற்றிய இவா், மாநில வா்த்தக அணித் தலைவராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தனது தங்கையின் பேரன் திருமணத்துக்குச் செல்வதற்காக புறப்பட்டபோது திடீரென மயக்கமடையவே, தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், மாரடைப்பு காரணமாக அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் கூறினா். அவரது இறுதிச்சடங்கு கல்லுக்குளத்திலுள்ள இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
உபயதுல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உபயதுல்லாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சா் உபயதுல்லா உடல் அடக்கம்: கட்சித் தலைவா்கள் அஞ்சலி