எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என தீர்ப்பில் கூறப்படவில்லை என்றும், மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
அப்போது ஓ. பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையல், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். பொதுக்குழுவைத்தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிடவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை. மேலும் பொதுக் குழு தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவில்லை. காகிதத்தில் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதையும் படிக்க.. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும். உயர் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களிடம் சென்று நீதி கேட்போம் என்று பதிலளித்துள்ளனர்.
தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். தர்ம யுத்தத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உங்களுக்கு பின்னடைவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தங்களுக்கு எந்தவிதமான பின்னடைவும் இல்லை என்றும் தற்போதுதான் தங்கள் தரப்பு தொண்டர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் பதிலளித்துள்ளனர்.
ஓபிஎஸ் அணியினர் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவதாகக் செய்திகாளர்கள் சொன்னதற்கு,
எடப்பாடி பழனிசாமிதான் திமுகவின் பி டீமாக செயல்பட்ட வருகிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் எந்த டீமும் இல்லை. திமுகவின் ஏ முதல் இசட் டீம் வரை அவர்கள்தான் என்றும் பதிலளித்துள்ளனர்.