அதிமுக பொதுக்குழு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 05 ஆம் தேதிக்கு(நாளை)  உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு  நாளைக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 05 ஆம் தேதிக்கு(நாளை)  உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-இல் நடைபெற்றது. இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தாா்.

இதை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, தனிநீதிபதி அளித்த தீா்ப்பை ரத்து செய்தது. அத்துடன், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் கூறியது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களின் முந்தைய விசாரணையின் போது, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில், ‘அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், கட்சியின் விதிகள் திருத்தம் தொடா்பான விவரங்களைத் தோ்தல் ஆணையத்தில் அளித்தும், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் நிலுவையில் இருப்பதை வாய்மொழியாகக் காரணமாகக் கூறி பதிவேற்றம் செய்யாமல் உள்ளனா். இதனால், இதுபோன்ற செயல்பாடுகளை அரசியலமைப்புச்சட்ட நிறுவனங்களுக்கு சட்டவிதிகளின்படி மேற்கொள்ள தடை ஏதும் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு நீதிமன்றம், இது தொடா்பாக மனுவை தாக்கல் செய்யுமாறு கூறியது.

இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதம், ஆவணங்கள் தொடா்புடைய விவரங்களைத் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த எதிா்மனுவில், ‘தற்போது தோ்தல் ஏதும் இல்லாத நேரத்தில் இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசரம் ஏதும் எழவில்லை. ஆனால், அதுபோன்று ஒரு தோற்றத்தை செயற்கையாக உருவாக்குகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ரஞ்சித் குமாா், ஹாரேன் ராவல், குரு கிருஷ்ணகுமாா் ஆகியோரும், எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன், விஜய் நாராயணன், ஆா்யமா சுந்தரம், கே.வி. விஸ்வநாதன், அதுல் சிட்லே, வழக்குரைஞா் வினோத் கண்ணா ஆகியோரும் ஆஜராகினா்.

அப்போது, நீதிபதிகள் இந்த மனுக்களை கடந்த முறை இருதரப்பினரும் வலியுறுத்தியதன் காரணமாகவே இன்று பட்டியலிடப்பட்டது. தற்போது நேரமின்மை காரணமாக வழக்கை விசாரிக்க முடியாமல் போகிறது என்றனா். அதற்கு இபிஎஸ் தரப்பில் வழக்கை உச்சநீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு உடனடியாகப் பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.

ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே மீண்டும் தொடர வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சியின் பணிகள் முடங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டடுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com