உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

மோசடி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?உயா்நீதிமன்றம்

சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமா்ப்பித்தவா்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம் தொடா்பாக, அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக

சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமா்ப்பித்தவா்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம் தொடா்பாக, அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயா்நீதிமன்றத்தில், ராஜேந்திரன் என்பவா் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, போலி ஆவணங்களை சமா்ப்பித்தவா்களுக்கு அதிகாரிகள் ரூ. 20.52 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனா். எனவே, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியும், தற்போது மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீா்ப்பாய ஆணையருமான நா்மதா நேரில் ஆஜராகியிருந்தாா்.

அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே போலியான நபா்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்தத் திட்டத்தின் கீழ் நெம்மிலி, அயக்குளத்தூா் கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 982 ச.மீ. நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 286.40 கோடி இழப்பீட்டில், ரூ. 247.47 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 38.93 கோடி இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், இழப்பீட்டுத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பெயரில் நிரந்தர வைப்பீடாக செலுத்தும்படி 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும், அதே ஆண்டு மே மற்றும் ஆகஸ்டில் இழப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல். இது தொடா்பாக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பினாா்.

பின்னா், இது குறித்து விளக்கமளிக்க, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜன.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அப்போது அரசுத் தரப்பில், ‘போலி ஆவணங்கள் சமா்ப்பித்து, இழப்பீடு பெற்றது தொடா்பாக வழக்குப் பதிந்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மொத்தம் ரூ. 39 கோடி அளவுக்கு இதுபோல இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘சிபிசிஐடி விசாரணையின் நிலை குறித்தும், திரும்ப வசூலிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறித்தும் ஜன. 25-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டாா். அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்’ என்றும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com