தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவசப் பேருந்தில் பயணம் செய்வதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், விராலிமலை - துவரங்குறிச்சி இடையே முறையாக பேருந்துகள் இயக்கப்படுமா? என அதிமுக எம்எல்ஏ கே.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | பொங்கல்: இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!
அதற்குப் பதில் அளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், 'விராலிமலை - துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ மீட்டர். இது திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழித்தடம் என்பதால் 5 முதல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 3 நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தின்படி, இதுவரை 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். தினசரி 40 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். பெண்களுக்கு மிகவும் பயன் தருகிற ஒரு திட்டமாக இது இருக்கிறது' என்றார்.
பின்னர் மீண்டும் விஜயபாஸ்கர், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் தற்போது சகஜ நிலைமைக்குத் திரும்பியும் பல வழித்தடங்களில் இன்னும் இயக்கப்படவில்லை என்றார்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் சிவசங்கர், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால் அவை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையும் படிக்க | பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் - ஒரு பார்வை