தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது மற்றும் 2023ஆம் ஆண்டின் 6 விருதுகள் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளுவர் திருநாளான தை 2ஆம் (16.01.2023) நாள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்ய உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டின் 6 விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமி அவர்களுக்கும், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லா அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது, வாலாஜா வல்லவன் அவர்களுக்கும், திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமி அவர்களுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.