தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலம். இக்கோயிலில் ஆண்டுதோறும் தை பிரமோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதற்கிடையே வைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 26 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தை மாத பிரமோற்சவத்தின் 5ஆவது நாளான அமாவாசையையொட்டி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் கோயில் குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபாடு செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். மேலும் சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சியளித்த நாள் என்பதால் தை அமாவாசை நாளில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் கோயில் வளாகத்தில் குவிந்தனர். இதையடுத்து அதிகாலை கோயில் குளக்கரை, காக்களூர் ஏரிக்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து . கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.