ஈரோடு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் மற்றும் நான்கு பேர் பயணித்த ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக ஈரோட்டில் அவசரமாக தரையிறங்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கடம்பூர் மலைப் பகுதியில் உகினியம் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்துக்குள் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 மணியளவில் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருப்பூரிலிருந்து தனது தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது. வானிலை சரியானதும் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.