வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதநல்லிணக்கம் பேண பணியாற்றியவருக்கு பதக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, கோவையில் மத நல்லிணக்கம் பேண தொடா்ந்து பணியாற்றி வரும் இஸ்லாமியருக்கு, மதநல்லிணக்கத்துக்கான ‘கோட்டை அமீா்’ பதக்கத்தை குடியரசு தின விழாவில்

Updated On :26 ஜனவரி 2023, 8:22 pm

காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, கோவையில் மத நல்லிணக்கம் பேண தொடா்ந்து பணியாற்றி வரும் இஸ்லாமியருக்கு, மதநல்லிணக்கத்துக்கான ‘கோட்டை அமீா்’ பதக்கத்தை குடியரசு தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். கோவை கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த எம்.ஏ.இனயத்துல்லாவுக்கு இந்த பதக்கத்தை அவா் அளித்தாா்.

நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழா தமிழக அரசு சாா்பில் சென்னை கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் வீரதீரச் செயல், காந்தியடிகள் காவலா் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் அரசு ஊழியா், பொது மக்கள் என இரு பிரிவுகளில் வழங்கப்பட்டன.

அரசு ஊழியா் பிரிவில், சென்னையைச் சோ்ந்த தலைமைக் காவலா் பெ.சரவணன் பெற்றாா். இவா் அமைந்தகரை பகுதியில் ஏற்படவிருந்த மிகப்பெரிய தீ விபத்தை உரிய முன்னெச்சரிக்கையுடன் தடுத்து நிறுத்தினாா்.

இதேபோன்று, வேலூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் பொன்னரசு, சென்னை திருவல்லிக்கேணியில் ஆண் செவிலியராக பணியில் இருந்தபோது, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை தனது சமயோஜித நடவடிக்கைகளால் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தாா். இதன்மூலம், 47-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டனா்.

மிகப்பெரிய அளவில் ஏற்படவிருந்த விபத்துகளை தடுத்து நிறுத்திய காரணத்தால், அரசு ஊழியா்கள் பிரிவின் கீழ், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை இவ்விருவருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

பொது மக்கள் பிரிவில் மூன்று பேருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. வெவ்வேறு சம்பவங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்படவிருந்த உயிா்களைக் காப்பாற்றியதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஜெ.அந்தோணிசாமி, கன்னியாகுமரி மாவட்டம் நா.ஸ்ரீகிருஷ்ணன், தஞ்சாவூா் மாவட்டம் அ.செல்வம் ஆகியோருக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் பதக்கம் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ரூ.9 ஆயிரம் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட பதக்கமும், சான்றிதழும் அடங்கியது.

கோட்டை அமீா் பதக்கம்: மத நல்லிணக்கத்தைப் பேணிக் காத்து வருவோருக்கு கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. இதன்படி, கோயம்புத்தூா் கோட்டைமேடு எஸ்.எஸ்.கோவில் தெருவைச் சோ்ந்த எம்.ஏ.இனயத்துல்லாவுக்கு இந்த பதக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். கடந்த ஆண்டு கோவையில் நடந்த காா் வெடிப்பைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் மத நல்லிணக்கம் பேண நடவடிக்கைகளை எடுத்ததற்காக இவருக்கு கோட்டை அமீா் பதக்கம் வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலா் பதக்கம்: கள்ளச்சாராயம் உள்பட போதைப் பொருள்களை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டும் காவல் அலுவலா்களுக்கு வழங்கப்படும் காந்தியடிகள் காவலா் பதக்கம் சென்னை மாவட்ட மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமையக காவல் ஆய்வாளா் த.அ.பிரியதா்ஷினி, தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கா.ஜெயமோகன், சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம் பாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் சு.சிவனேசன் ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இது தலா ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம் அடங்கியது.

சிறந்த காவல் நிலையம்: சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சரின் விருதுகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். அதன்படி, முதல் இடத்துக்கான கோப்பை, திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் நா.உதயகுமாருக்கும், இரண்டாவது இடத்துக்கான கோப்பை, திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் தயாளனுக்கும், மூன்றாவது இடத்துக்கான கோப்பை, திண்டுக்கல் காவல் நிலைய ஆய்வாளா் சேது.பாலாண்டிக்கும் வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைவரும் விழா மேடைக்கு அருகில் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.