கோவை விமான நிலையத்தில் ரூ.45.31 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
உளவுத்துறையினருக்கு கிடைத்திருந்த ரகசிய தகவலின் அடிப்படையில், 30.06.2023 அன்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு ஆண் பயணிகள் வருகை மண்டபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய சோதனையில், அந்த பயணிகளின் தோள்பட்டை பை மற்றும் பேன்ட் பாக்கெட்டில் செயின் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. ஒரு பயணியிடம் இருந்து 395 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான இரண்டு தங்கச் செயின்களும், மற்றொரு பயணியிடம் இருந்து 359 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான இரண்டு தங்கச் செயின்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 754 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான நான்கு தங்கச் செயின்களின் மதிப்பு ரூ.45.31 லட்சமாகும். அவர்கள் இருவர் மீதும் சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் இரண்டு தங்க செயின்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.