கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,300 கிலோ போதைப் பொருள்களை காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் போலீஸாா் பறிமுதல் செய்து, சரக்கு லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை குன்றத்தூருக்கு குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் படி, சேந்தமங்கலம் பகுதியில் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து அதிவேகத்தில் வந்த மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா, கூல் லிப் போன்ற போதைப்பொருள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சரக்கு லாரியை ஓட்டி வந்த மகேஷ்குமாா்(45) என்பவரை கைது செய்து லாரியில் 218 மூட்டைகளில் இருந்த 1,300 கிலோ எடையுள்ள ரூ. 12 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஓட்டுநர் மகேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், குன்றத்தூரைச் சோ்ந்த பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான வாகனம் என்றும், அவா் ரூ. 12 லட்சத்துக்கு குட்கா பொருள்களை வாங்கி வரச் சொன்னதாகவும் மகேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
அதன்பேரில், சுங்குவாா்சத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து பால்ராஜை தேடி வருகின்றனா்.