வேங்கைவயல் விவகாரம்: 8 பேருக்கும் மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேருக்கு மரபணு பரிசோதனை நடத்த மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வேங்கைவயல் விவகாரம்: 8 பேருக்கும் மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேருக்கு மரபணு பரிசோதனை நடத்த மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேங்கைவயலில் மரபணு பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும், ஜூலை 5 ஆம் தேதி புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரபணு பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் குடியிருப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், சந்தேகப்படும்படியாக உள்ளோரின் மரபணுவை ஒப்பிட்டுப் பார்க்க சிபி சிஐடி போலீசார் முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 11 பேருக்கு மரபணு பரிசோதனை நடத்திட சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து நீதிமன்ற அனுமதியும் பெற்றனர். ஆனால், இதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுத்துச் சென்றனர். 8 பேர் வராமல், மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

அவர்களின் தரப்பை விசாரித்த உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட வழக்கின் விசாரணை நீதிமன்றம் அந்த 8 பேரின் கருத்தைக் கேட்டுப் பதிவு செய்து, மேல்நடவடிக்கை குறித்து உத்தரவிடலாம் என தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் ஆஜரான இவர்கள், தங்களுக்கு மரபணு பரிசோதனை நடத்தக் கூடாது என மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து தீர்ப்பை நீதிபதி எஸ். ஜெயந்தி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது, ஜூலை 5 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகி 8 பேரும் மரபணு பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளைத் தர வேண்டும் என நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com