விழுப்புரம்: விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பில் புதன்கிழமை (ஜூலை 5) மேல்முறையீடு செய்யப்பட்டது.
2021- ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ். பி. மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்து, ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் எஸ்.பி.யின் சார்பில் அவரது வழக்குரைஞர் ஹேமராஜன் கடந்த ஜூன் 22-ஆம் தேதி மேல்முறையீடு செய்தார்.
இதுபோல, தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சார்பில், அவரது வழக்குரைஞர் ரவீந்திரன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.