திண்டுக்கல்: தேங்காய்க்கு கட்டுபடியான விலை நிர்ணயிக்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கிருஷ்ணன் முன்னில வைத்தார்.
போராட்டத்தின் போது கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை அளவை 290 கிலோவில் இருந்து 900 கிலோவாக உயர்த்த வேண்டும். தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். கேரளத்தைப் போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிலோ ரூ.50க்கு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தேங்காய் உடைத்து நடத்திய இந்த போராட்டம் பரபரப்பு ஏற்படுத்தியது.