பெ.நா.பாளையம்: கோவை நகர வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக்காட்டு பகுதியில் புதன்கிழமை யானை ஒன்று இறந்து கிடந்தது.
ஆனைகட்டி வனப்பகுதிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த மலை அடிவாரத்தில் உள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையனூர், பெரிய தடாகம், மாங்கரை உள்ளிட்ட கிராமங்களுக்குள் உணவு மற்றும் குடிநீர் தேடி நுழைவதுண்டு.
இந்நிலையில், புதன்கிழமை காலை தடாகம் காப்புக்காடு அருகில் உள்ள ஒரு பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்த வனப்பணியாளர்கள் இதனைக் கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு வந்த கோவை மாவட்ட வன உயர் அதிகாரிகள், வன கால்நடை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
உடல் கூறாய்வுக்கு பின்பு தான் யானை இறப்பிற்கான காரணம் என்ன என்பது தெரியவரும். ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் இறப்பது இயற்கை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.