வெள்ளக்கோவிலில் நூற்பாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் எரிந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஊடையம் ரோடு சேனாதிபதி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் வெள்ளக்கோவில் தீத்தாம்பாளையம் தெற்குத் தோட்டத்தில் நூற்பாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நூற்பாலைக்கு அருகில் கிடந்த கழிவுகளில் இன்று திடீரென தீப்பிடித்தது. மளமளவென எரிந்த தீ மேற்கூரைக்கும் பரவியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகர், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏறத்தாழ மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைத்தனர். அதற்குள் 100 க்கு 60 அடி நீள, அகலமான கட்டட மேற்கூரைகள், இயந்திரங்கள், பஞ்சுகள், நூல்கள், தொழிலாளர் அறைகள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
சேத மதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. நூற்பாலைக்கு அருகிலுள்ள காட்டில் காய்ந்த புற்களில் தீப்பிடித்து அது நூற்பாலைக்கும் பரவியதாகத் தெரிகிறது. வெள்ளக்கோவில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.