ராமேசுவரம்: ஆடி அமாவாசையையொட்டி திங்கள்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
நாடு முழுவதிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஸ்ரீராமன் சிவனை வழிபட்டு பாவம் விமோட்சனம் பெற்ற ஸ்தலம் என்பதால் இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற கோயிலாகும். இதனால், ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாயள அமாவாசை போன்ற முக்கிய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடி வழிபாடு நடத்துவருது வழக்கம்.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
இந்த நிலையில், ஆடி அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் ராமேசுவரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்தனர். தங்களது முன்னோா்களுக்கு அக்னி தீர்த்த கடலில் நீராடி திதி கொடுத்து திங்கள்கிழமை வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் நின்று கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடினார். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பக்தர்கள் இடையூறு இன்றி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டது.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையர் கண்ணன் தலைமையில் 160-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுகாதார பணி மற்றும் குடிநீர் வசதிகள் செய்திருந்தனர்.
இதையும் படிக்க | அம்பத்தூரில் அரசு பொது மருத்துவமனை அமைக்கப்படுமா?
மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் கண்காணிப்பாளர் அருண் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம், சேதுக்கரை,தேவிபட்டணம் பகுதியில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம்,தேவிபட்டணம்,சேதுக்கரை உள்ளிட்ட புனித ஸ்தலங்கள் இருக்கும் பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துக்கள் அதிகளவில் இயக்கப்பட்டது.