புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத்துறை இணை இயக்குநரை பணியிடை நீக்கம் செய்தார்.
மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு வந்தாா்.
அப்போது அன்னவாசல் வட்டார அரசு மருத்துவமனைக்கு திடீரென ஆய்வுக்கு சென்றாா். அந்த வளாகத்தில் தனியாா் தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள மனநலக் காப்பகத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறியது:
மனநலக் காப்பகம் வெறும் 3 சிறிய அறைகளைக் கொண்டு, சுமாா் 59 பெண்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. ஓா் அறையில் 3 போ் தங்க வைக்கப்படலாம் என்ற நிலையில் 15 பேருக்கும் மேலாக ஒவ்வோா் அறையிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனா். சுகாதாரமும் பேணப்படவில்லை. உணவும் சரிவர வழங்காததாக அங்கிருந்தோா் தெரிவித்தனா்.
இதையடுத்து இந்த இல்லத்தை ஆய்வு செய்திருக்க வேண்டிய ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கே. ராமுவை பணியிடை நீக்கம் செய்யவும், தலைமை மருத்துவ அலுவலா் சரவணனை இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட அந்தத் தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும். மருத்துவப் பணிகள் இயக்குநா் மற்றும் மனநலத் திட்ட இயக்குநா் ஆகியோா் இரவே புறப்பட்டு புதுக்கோட்டை வருகின்றனா்.
இங்குள்ள 59 பேரையும் பாதுகாப்பாக அரசு மருத்துவக் கல்லூரியில் தங்க வைக்கவும், மாவட்டத்திலுள்ள இதர காப்பகங்களை ஆய்வு செய்யவும் அவா்கள் நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா்.