சென்னை: வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது, வாரிசுகளால் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தொழில்நுட்பக் கல்லுரியின் பவள விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா என்று பெயரிடப்பட்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து, வாரிசு அரசியல் என்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் விமரிசித்திருந்ததற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் கூறியிருப்பதாவது, தமிழக மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி அறிவாற்றலிலும் முதலிடம் பெறவேண்டும். அனைவருக்கும் உயர்கல்வி என்பதே நோக்கம் ஆராய்ச்சிக் கல்வி வழங்குவதே அரசின் நோக்கமாக அமைந்துள்ளது. பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லாதவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து வருவதே திமுக அரசின் நோக்கம்.
தமிழக மாணவர்கள் அறிவாற்றலிலும் முதலிடம் வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எம்ஐடி வளாகத்தில் 1000 பேர் அமரக் கூடிய ஏசி வசதியுடன் அரங்கம் அமைக்கப்படும். கற்றல் வளாகம், பவள விழா பூங்கா அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.