பல்லடம்: பல்லடம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சம்பள பணம் வழங்கக் கோரி வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 120-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தின கூலி ரூ. 442 வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் தின கூலியாக இ.எஸ்.ஐ, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பிடித்தம் போக ரூ.385 என கணக்கீடு செய்து தொழிலாளர்களுக்கு சம்பளம் புதன்கிழமை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
இதைத்தொடர்ந்து பல்லடம் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பல்லடம் செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியார்கள் பல்லடம் நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன்பு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலியை வழங்கக் கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி தூய்மை அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சங்கர், காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தர்னா போராட்டம் நடைபெற்று வருகிறது.