ஆவின் பொருள்களின் விலை மீண்டும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சராசரியாக நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 30 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகிய பொருள்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒரு கிலோ பன்னீர் ரூ.450-ல் இருந்து ரூ.550 ஆகவும், அரை கிலோ பன்னீர் ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பன்னீர் 200 கிராம் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, பாதாம் மிக்ஸ் 200 கிராம் 100-ல் இருந்து ரூ.120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ஆவின் பால் மற்றும் பாலில் செய்யப்பட்ட ஐஸ்கிரிம் போன்ற பொருள்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.