தஞ்சாவூரில் ரூ. 133.56 கோடி மதிப்பில் 13 திட்டங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

தஞ்சாவூரில் ரூ. 133.56 கோடி மதிப்பில் 13 திட்டங்களைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை திறந்து வைத்தார்.
தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களைப் பொத்தானை அழுத்தி திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களைப் பொத்தானை அழுத்தி திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரூ. 133.56 கோடி மதிப்பில் 13 திட்டங்களைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை திறந்து வைத்தார்.

இதில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 10.46 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம், ரூ. 61.79 கோடியில் மாநாட்டு மையக் கட்டடம், அருளானந்த நகரில் ரூ. 11.50 கோடியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்கிற ஸ்டெம் பூங்கா, காந்திஜி சாலையில் ரூ. 15.61 கோடியில் காந்திஜி வணிக வளாகம், அண்ணா சாலையில் ரூ. 3 கோடியில் வணிக வளாகம் ஆகியவை புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

இதேபோல, மேல வீதி அருகே ரூ. 1.44 கோடியில் மேம்படுத்தப்பட்ட அழகி குளம், கரந்தையில் ரூ. 2.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட கருணாசாமி குளம், பெரியகோயில் அருகே பெத்தண்ணன் கலையரங்கத்தை நவீன திரையரங்காக மாற்றும் பணி, சிராஜூதீன் நகரில் ரூ. 15.69 கோடியில் சூரிய ஒளி மின் நிலையம், ரூ. 7.32 கோடியில் மாநகராட்சி பள்ளிகளை பொலிவுறு பள்ளிகளாக மாற்றுதல் ஆகியவை முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

மேலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 1.50 கோடியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி புற்றுநோய் வார்டு, தீப்புண் வார்டு பகுதியில் இரு நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூ. 1.50 கோடி மதிப்பில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம் கட்டும் பணி ஆகியவை புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

இதையடுத்து, பொது நிதியிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் ரூ. 133.56 கோடி மதிப்பில் 13 திட்டங்களைத் திறந்து வைத்து, அடிக்கலும் நாட்டப்பட்டது. 

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் டி. கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com