கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசுப் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பாமகவினர் நிறுவனத்தை முற்றுகையிட முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது போராட்டத்தின் இடையே காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் காவல் துறையினர் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்பு, பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றதால் போராட்டம் கட்டுக்குள் வந்தது. இச்சம்பவத்தில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீத் உள்பட ஐந்து பேருக்கும், இரண்டு நிருபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசுப் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து பாதுகாப்புக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 5ஜி சேவையில் ஆர்வம் காட்டாத வோடஃபோன், பிஎஸ்என்எல்!
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு பேருந்து சேவையை நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.