சிதம்பரம்: சிதம்பரத்தில் முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சிதம்பரம் வடக்கு தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் ராமு என்கிற உண்டி ராமு (35), இவர் வெள்ளிக்கிழமை காலை தில்லை காளியம்மன் கோயில் எதிரே உள்ள ஒரு டிபன் கடையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த இரண்டு பேர் கத்தி மற்றும் உருட்டு கட்டையால் ராமுவின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ராமு பலியானார்.
இதையும் படிக்க | நெல்லை கங்கைகொண்டானில் மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் பலி
இது குறித்து தகவல் பேரில் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமு உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ராமுவை வெட்டிக் கொலை செய்த தில்லை காளியம்மன் கோயில் தெரு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செல்வம் மகன் சத்யேந்திரன்(21), அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் கணேசன் (26) இரண்டு பேரும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது.