திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானில் வெள்ளிக்கிழமை அதிகாலை மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் அரவிந்த் (21). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கம்பெனிக்கு வேலைக்கு செல்வதற்காக அரவிந்த் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் மாவு மில் அருகே வந்துகொண்டிருந்த போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஆலமரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அரவிந்த் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.