புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் சரகத்தைச் சேர்ந்த பூங்குடியில் இன்று மாலை நேரிட்ட வெடி விபத்தில், அந்த ஆலையின் உரிமையாளர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது பூங்குடி கிராமம். இங்கு வைரமணி என்பவருக்குச் சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று, சுமார் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், கிராமப்புறங்களில் திருவிழாக்களுக்கும், சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் நாட்டு ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை வழக்கம்போல இங்கு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் வெடித்து தீப்பிடித்தது.
இதில் கோவில்பட்டியைச் சேர்ந்த வைரமணி, குமார், வீரமுத்து, திருமலை, சுரேஷ் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வெள்ளனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.