மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மலைப் பாம்புகள், பல்லி உள்ளிட்டவைகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை (வான் நுண்ணறிவுப்பிரிவு) அலுவலர்கள், வழக்கமாக மேற்கொள்ளும் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொண்டனர். இதில், ஹூசைன் மன்சூர் என்ற பயணி தனது உடைமைகளுக்குள், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்த பாம்பு குட்டிகள் 47, இரு பல்லிகள் உள்ளிட்டவைகளை உயிருடன், உரிய அனுமதியின்றி முறைகேடாக மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கும் (வன உயிரியல் பிரிவு) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் இதுபோல ஆயிரக்கணக்கான ஆமைக்குஞ்சுகளை பயணி ஒருவர் இதேபோல கொண்டு வந்து, அவை மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.