திருச்சி: திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு இன்று காலை புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியிலிருந்து இன்று காலை 10.40 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் மொத்தம் 161 பேர் இருந்தனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. அப்போது அந்த விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சற்று அருகே சென்று கொண்டிருந்தது.
உடனடியாக விமானி திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு!
இதையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. பகல் 12 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் சார்ஜாவுக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.