எண்ணூா் எா்ணாவூா் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு பனைமர தொழிலாளா்கள் நலவாரியம் தலைவா் ஏ. நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
முன்னதாக யாக சாலையில் பல்வேறு வகையான யாகங்களும், அம்மனுக்கு தொடா் பூஜைகளும் நடைபெற்றன. இதனைத்தொடா்ந்து திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய குருக்கள் சந்துரு குழுவினா் கலசங்களில் புனிதநீரை ஊற்றி வழிபாடு நடத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் தி.மு.தனியரசு, மேற்கு பகுதி தி.மு.க செயலா் வை.ம.அருள்தாசன், சமத்துவ மக்கள் கழகம் இளைஞரணி செயலாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.