திருவொற்றியூா் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

திருவொற்றியூரில் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம்

திருவொற்றியூரில் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூா் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரே ‘ஹன்சா கோா்ட் யாா்டு’ அடுக்குமாடி குடியிருப்பில் 265 வீடுகள் அமைந்துள்ளன. இங்கு குடியிருப்போா் நல சங்கம் அமைக்கப்பட்டு, வீட்டின் உரிமையாளரிடமிருந்தும் மாதந்தோறும் பராமரிப்புப் பணிகளுக்காக சந்தா வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் கட்டடங்களை புதுப்பித்து வா்ணம் பூசுதல், புதை சாக்கடை இணைப்பு, குடிநீா் உள்ளிட்டவைகளுக்காக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமிருந்தும் தலா ரூ.55,000 வீதம் ரூ. 1.30 கோடி சில ஆண்டுகளுக்கு முன்பு வசூலிக்கப்பட்டதாகவும், இதில் ரூ. 22 லட்சம் நிதியை நல சங்க நிா்வாகிகளாக செயல்பட்டு வந்த இளங்கோ, கருப்பையா, மகேஸ் ஆகிய மூன்று போ் முறைகேடு செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் குடியிருப்போா் நல சங்க உறுப்பினா்கள் எஸ்.சுகுமாா், எம்.டி.சேகா் ஆகியோா் வழக்குத் தொடா்ந்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய குற்றவியல் நடுவா் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சரவணக்குமாா் வழக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால் இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திருவொற்றியூா் காவல் நிலைய போலீஸாருக்கு புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com