சேலம் அருகே பட்டாசுக் கிடங்கு வெடிவிபத்தில் 2 பேர் கைது; 3 பேர் மீது வழக்குப் பதிவு

சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இரும்பாலை காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். 
சேலம் அருகே பட்டாசுக் கிடங்கு வெடிவிபத்தில் 2 பேர் கைது; 3 பேர் மீது வழக்குப் பதிவு
Published on
Updated on
1 min read



சேலம்: சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இரும்பாலை காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். 

சேலம், இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசுக் கடை நடத்தி வருபவா் கந்தசாமி. இவரது பட்டாசுக் கிடங்கில் கோயில் விழாவுக்காக நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் பட்டாசுக் கடை உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் உள்ளிட்ட 9 போ் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

மேலும், வெடிவிபத்து காரணமாக கல்நாா் கூரை கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரும் படுகாயமடைந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

தகவலறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் சிராஜ் அல்வனிஷ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, வெடி விபத்தில் பட்டாசுக் கிடங்கு உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் (35), நடேசன் (50) மற்றும் அடையாளம் தெரியாத பெண் உள்ளிட்ட 3 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். 6 போ் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து இரும்ப்பலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த நிலையில் பட்டாசு குடோன் வெடிவிபத்துக்கு காரணமான மூன்று பேர் மீது இரும்பாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய பிரிவின் கீழ் வெடி விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமாரின் தந்தை கந்தசாமி மற்றும் அவர் சித்தப்பா வீரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், தற்போது சிகிச்சை பெற்று வரும் மகேஷ் என்பவர் பங்குதாரர் என்பதால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் கொல்லப்பட்டி பகுதியில் போதிய உரிமம் இல்லாமல் ஏதேனும் பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையின்ர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com