வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதியெடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் மத்திய அமைச்சா் அமித் ஷா, தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற இலக்காக நிர்ணயிப்போம். இரண்டு முறை பிரதமர் வேட்பாளரை தமிழகம் இழந்ததற்கு காரணம் திமுக தான்.
வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதியெடுப்போம். மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தென்சென்னை தொகுதியில் எஞ்சியிருக்கும் 40 சதவீத பூத் கமிட்டி பணிகளை வேகமாக முடிக்க வேண்டும்.
2024 மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.
தமிழகம் இருளில் உள்ளதை மின் தடை காட்டுகிறது. தமிழகத்திற்கு பாஜக வெளிச்சத்தை கொண்டு வரும். நான் சென்னை விமான நிலையம் வந்தவுடன் மின்சாரம் போனது எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்று பேசினார்.
இதையும் படிக்க: நடராஜர் கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட சிவனடியார்கள்!